இலங்கை
பதில் பாதுகாப்பு அமைச்சர்-துருக்கி தூதுவர் இடையே சந்திப்பு!

பதில் பாதுகாப்பு அமைச்சர்-துருக்கி தூதுவர் இடையே சந்திப்பு!
இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சரை துருக்கிய தூதுவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
துருக்கி குடியரசின் தூதுவர், மேதகு செமிஹ் லுட்ஃபு துர்குட், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பதில் அமைச்சர் துருக்கிய தூதரை அன்புடன் வரவேற்றார். இலங்கைக்கும் துருக்கிக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, இரு பிரமுகர்களும் கலந்துரையாடினர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பரஸ்பர ஆர்வத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்பு உறவுகளை மேலும் வளர்ப்பதற்கான துருக்கியின் உறுதிப்பாட்டை தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
அத்தோடு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (13) நாட்டை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG புயுகடா-வின் ஆய்வுப் பயணத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கலந்து கொண்டார்.
இதன்போது துருக்கி தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் Anul Bilgin ஊடக பதில் பாதுகாப்பு அமைச்சருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.[ஒ]