இலங்கை
வலி.வடக்கை இராணுவம் ஆக்கிரமித்து 35 ஆண்டுகள்!

வலி.வடக்கை இராணுவம் ஆக்கிரமித்து 35 ஆண்டுகள்!
வலிகாமம் வடக்கில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் அந்த மக்கள் முழுமையாக மீள் குடியமர்த்தப்படாதுள்ளனர். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள போதும் அவர்களின் காணிகள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இன்னமும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு, அவற்றின் பயன்களை இராணுவமே அனுபவித்துவருகின்றது.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு மக்கள் தங்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயம் என்று இலங்கை இராணுவம் அறிவித்துக்கையகப்படுத்திக் கொண்டது. அந்தப் பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்கள் பல இடங்களில் குடியேறினர் – இடம்பெயர்ந்தனர். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அந்த மக்களின் காணி வலிகாமம் வடக்கில் இன்னமும் 2 ஆயிரத்து 700 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தை பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்தாலும், அந்தப் பிரதேசத்தின் வளங்களைச் சுரண்டி வருமானம் ஈட்டுவதிலேயே இராணுவம் முனைப்பாக இருக்கின்றது. தற்போது வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளில் 50 சதவீதமானவற்றில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளையும், பண்ணைகளையும் முன்னெடுக்கின்றனர். 10 சதவீதமான காணிகளில் மைதானங்கள், வர்த்தக நிலையங்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் என்பன இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறப்படும் விவசாய அறுவடையையும், அவற்றின் ஊடான வருமானத்தையும் இராணுவமே பெற்றுக்கொண்டு வருகின்றது. அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தையிட்டிப் பகுதியில் விடுவிக்கத் தயாராகவிருந்த பெண்கள் விடுதி ஒன்றில் தற்போது இராணுவத்தினால் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில், இராணுவத்தினர் பிரதேசசெயலகங்களிடமோ அல்லது உரிய அரச நிர்வாகங்களிலோ எந்தவித அனுமதியும் பெறாது கட்டுமானங்களையும். வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். அதே போன்று காங்கேசன்துறையில் தல்செவன விடுதியைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதி. அங்குள்ள சில வீதிகள் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மறைமுகமாக இராணுவத்தின் ஆளுகை தற்போதும் தொடர்கின்றது.
வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போதும் பல்வெறு இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடிகளுடன் தங்களின் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துகின்றனர். பாடசாலைகள், பாடசாலை மைதானங்கள், ஆலயங்கள், மயானங்கள் எனப் பலவும் இன்னமும் இராணுவத்தின் வசமே இருக்கின்றன. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று அவர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர்.