Connect with us

இலங்கை

மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் :பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!

Published

on

Loading

மலக்குழிக் கழிவுநீருடன் கிணற்றுநீர் கலக்கும் அபாயம் :பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!

கொட்டித் தீர்த்த பெங்கால் புயல்மழை கிணறுகளின் நீரின் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெருக்கெடுத்த வெள்ள நீர் கிணறுகளை நிரப்பியுள்ளதோடு, பல இடங்களில் மலக்குழிக் கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொதித்தாறிய நீரைப் பருகுவதே பாதுகாப்பானது எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

பெங்கால் புயல் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குத் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

பெங்கால் புயல் 2008 நவம்பரில் தாக்கிய நிசா புயலைவிட வீரியம் குறைவானது. ஆயினும், நிசாவைவிட மிக மோசமான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அதன் வருடாந்தச் சராசரி மழைவீழ்ச்சியான 1240 மில்லிமீற்றர் மழையை ஒக்டோபர் மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே பெற்றிருந்த நிலையிலேயே பெங்கால் புயல் 720 மில்லிமீற்றர் மழையை மேலதிகமாகக் கொண்டு வந்து கொட்டியுள்ளது.

ஏற்கனவே நிலம் அதன் நீர்க் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் இம் மேலதிக மழைநீர் போக்கிடமின்றி வெள்ளக்காடாக உருவெடுத்ததில்  நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.

வெள்ள நிவாரணப் பணிகளில் நான் ஈடுபட்டிருந்தபோது பல்வேறு பகுதிகளிலுமுள்ள கிணறுகளில் மலக்குழிக் கழிவுநீர் கலக்கும் அபாயம் என்னால் உணரப்பட்டுள்ளது.

Advertisement

கிணறுகளில் குளோரின் இட்டுத்தொற்று நீக்குவதும், கிணற்று நீரை இறைப்பதும் அவசியமானவை. எனினும் இவை மாத்திரமே பாதுகாப்புக்குப் போதுமானவையல்ல. 

வெடிப்புகளையும் துளைகளையும் கொண்ட மயோசின் சுண்ணாம்புப் பாறைகளினூடாக கிணற்றுக்குள் கசியும் நிலத்தடி நீர் இன்னும் சில வாரங்களுக்கேனும் கிருமிகளைக் காவிவரும் அபாயம் உள்ளதால் கொதித்து ஆறிய நீரே முழுப்பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆகும்.

வெள்ளச் சேதம் அதிகமானதற்கு வெள்ளநீர் உடனடியாவே கடலைச் சென்றடையக்கூடிய கட்டுமான வசதிகள் எம்மிடம் போதாமையும் ஒரு காரணமாகும் இருக்கின்ற வெள்ள வாய்க்கால்களும் எம்மால் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. 

Advertisement

பூமி சூடாகுவதன் விளைவாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் வருங்காலத்தில் இன்னும் மோசமான வீரியம் மிக்க புயல்களை உருவாக்குமென ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இப்போதே நாம் விழித்துக்கொண்டு முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இயற்கை ஏற்படுத்தப்போகும் பேரனர்த்தங்களில் இருந்து நாம் ஒருபோதும் தப்பமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன