இலங்கை
அடுத்த ஐந்து ஆண்டுக்குள் யாழில் சர்வதேசப் போட்டிகள்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!

அடுத்த ஐந்து ஆண்டுக்குள் யாழில் சர்வதேசப் போட்டிகள்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் அமைப்பதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் சர்வதேசரீதியான போட்டிகள் அங்கு நடக்கும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாட்டை76 வருடங்கள் ஆண்டவர்கள், அவர்களுடன் கரம் கோர்த்திருந்தவர்கள் தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் இது தொடர்பாகச் சிந்திக்கவில்லை. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அங்கு வாழும் இளைஞர்களின் விளையாட்டு ஆற்றலை இனங்காண்பதற்கு கடந்த காலங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை. இன்று யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் வரப்போகிறது. எமது ஐந்து ஆண்டு காலப்பகுதிக்குள் அங்கு முதலாவது சர்வதேசப் போட்டி கூட நடைபெறும். யாழ்ப்பாணத்துக்குரிய உள்ளக விளையாட்டரங்கினை சர்வதேச தரத்தில் அமைப்பதற்குரிய நடவடிக்கையும் இடம்பெறும். அதற்குரிய இடமம் அடையாளம் காணப்பட்டுள்ளது- என்றார்.