Connect with us

இந்தியா

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்: ஒரு சமூகப் போராளியின் கதை

Published

on

Nanaji-Deshmukh

Loading

பாரத ரத்னா நானாஜி தேஷ்முக்: ஒரு சமூகப் போராளியின் கதை

பீகார் தலைநகர் பாட்னாவில், ஜெயபிரகாஷ் நாராயண் (ஜே.பி.) தலைமையில் காந்தி மைதானத்தில் இருந்து மாநிலத் தலைமைச் செயலகம் நோக்கி மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அப்போது, காவல்துறையினர் திடீரென தடியடி நடத்தினர். இந்த தடியடியில் ஜே.பி.க்கு காயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், ஜனசங்க (பா.ஜ.க.வின் முன்னோடி) மூத்த தலைவரும், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் நிர்வாகியுமான நானாஜி தேஷ்முக், குறுக்கே வந்து தடியடியைத் தானே தாங்கிக்கொண்டார். இதில் அவருக்கு கை முறிவு ஏற்பட்டது.இந்திரா காந்தி அரசின் “ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு” எதிராக நடைபெற்ற ஜே.பி. இயக்கத்தின் மிகத் துணிச்சலான முகங்களில் ஒருவராக நானாஜி தேஷ்முக் திகழ்ந்தார். எமெர்ஜென்சி அறிவிக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, 1975 ஜூன் 22 அன்று, இந்திரா காந்தியின் ரேபரேலி மக்களவைத் தேர்தல் வெற்றி அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, அவர் பதவி விலகக் கோரி அகில இந்திய ஜனதா முன்னணிக்கு செயல் திட்டத்தை நானாஜி வகுத்தார். நானாஜி அரசியலில் ஜே.பி.க்கு இருந்த வெறுப்பைக் குறைத்து, அரசியல் அதிகாரத்திற்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை அவருக்கு புரியவைத்தார் என்று முன்னாள் பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.என். கோவிந்தாச்சார்யா தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கபுதிதாக உருவாக்கப்பட்ட ஜனதா முன்னணியின் தலைவர்கள், டெல்லியில் உள்ள ஜே.பி.யின் இல்லத்தில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கச் சந்தித்தனர். இதில் நானாஜி தேஷ்முக் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே மாலை, ராம்லீலா மைதானத்தில் பேரணியை நடத்தினர். அங்கு ஜே.பி., இந்திரா காந்தியின் பிரதமர் பதவியை சட்டவிரோதமானது என்று கூறி, காவல்துறையினரையும் ராணுவத்தினரையும் பிறப்பித்த “சட்டவிரோத” உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். வினய் சீதாபதி தனது “ஜுகல்பந்தி -மோடிக்கு முந்தைய பாஜக” என்ற புத்தகத்தில் இதை எழுதியுள்ளார்.அன்றிரவு, பிரதமர் இந்திரா காந்தி எமெர்ஜென்சியை அமல்படுத்தினார். இதன்மூலம் முக்கிய அடிப்படை உரிமைகள் இடைநிறுத்தப்பட்டு, நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. அமைச்சரவைக்கு அடுத்த நாள் காலை 6 மணிக்குத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது.இருப்பினும், நானாஜி தேஷ்முக் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பினார். “நானாஜி தேஷ்முக் ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்ற பிறகு தப்பினார்… ஒரு பெண் குரல் அவருக்கு ஒரு மணிநேரம் அவகாசம் இருப்பதாகவும், ‘போலீஸ் சுமார் 1 மணியளவில் உங்கள் இடத்தை சுற்றி வளைக்கும்’ என்றும் கூறியது… நானாஜி மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய அழைப்புகளை மேற்கொண்டார். அதே நேரத்தில் அவரது உதவியாளர் ஒருசில சட்டைகளையும் வேட்டிகளையும் பெட்டிக்குள் அடைத்தார். டெல்லியின் மற்ற பகுதி உறங்கிக் கொண்டிருந்தபோது, அவர் ரகசிய இடத்திற்குத் தப்பிச் சென்றார். விரைவில் அவர் தெற்கு மும்பையில் (தொழிலதிபர்) நுஸ்லி வாடியாவின் வீட்டில் பதுங்கியிருந்தார்,” என்று சீதாபதி எழுதுகிறார்.நானாஜிக்கு நெருக்கமான நுஸ்லி மற்றும் அவரது மனைவி மௌரீன் அவரைக் காப்பாற்றினர். நுஸ்லி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நெருக்கடி நிலையில் உயிர்வாழ நிதி உதவியும் செய்தார். நானாஜி இறுதியாக 1975 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். 1977 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திரா காந்தி தேர்தல் அறிவித்தவுடன், நானாஜி உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மக்களவைத் தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்ற அந்த தேர்தலில் அவரும் வெற்றி பெற்றார்.மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது, ஜனதா கட்சி அரசில் நானாஜி தேஷ்முக்கிற்கு தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அவரை அப்பதவியில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியது. 1970-களின் முற்பகுதியில் ஜனசங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றியபோது, வாடியா, மாஃபத்லால் மற்றும் டாடாஸ் போன்ற தொழிலதிபர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று ஆர்.எஸ்.எஸ். அஞ்சியதுதான் இதற்குக் காரணம். சங்கம் அவரை முழுமையாக நம்பியது, அதனால்தான் நன்கொடைகளை சேகரிக்க தனித்து அனுப்பப்பட்டது.”கட்சிக்கு பணம் சேகரிப்பதில் அவர் காட்டிய இடைவிடாத விடாமுயற்சிதான் அவரது புகழுக்குக் காரணம். குதிரையில் சவாரி செய்யும் ஒரு இளவரசரை பணம் கொடுக்கத் தூண்டுவதற்காக அவருக்குப் பின்னாலேயே ஓடிய நிகழ்வும் இதில் அடங்கும்” என்று வினய் சீதாபதி தனது நூலில் எழுதுகிறார்.மகாராஷ்டிராவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நானாஜி, முறையாக ‘சண்டிகாதாஸ் அம்ரிட்ராவ் தேஷ்முக்’ என்று பெயரிடப்பட்டார். அவர் தனது கல்விக் கட்டணத்தைச் செலுத்த ஒருமுறை காய்கறிகள் விற்றது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நானாஜி தேஷ்முக் வளர்ச்சி மிக விரைவாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்த அவர், 1950 இல் கோரக்பூரில் முதல் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியை நிறுவினார். பின்னர் ஜனசங்கத்தில் இணைந்து, அதன் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.ஜனதா கட்சி அரசாங்கம் அமைந்த பிறகு, நானாஜி அரசியலில் இருந்து படிப்படியாக விலகினார். தனது 60 வயதில் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். முதலில் கோண்டாவில் குடியேறிய அவர், பின்னர் சித்ரகூட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு, “இந்தியாவின் முதல் கிராமப்புற பல்கலைக்கழகமான” மகாத்மா காந்தி சித்ரகூட் கிராமோதயா விஸ்வவித்யாலயத்தை நிறுவினார். நானாஜி தேஷ்முக் 2010 ஆம் ஆண்டு, தனது 93 வயதில் சித்ரகூட்டில் காலமானார். 2019 ஆம் ஆண்டில், நரேந்திர மோடி அரசாங்கத்தால் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன