இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; வத்திக்கான் பிரதிநிதி இலங்கைக்கு வருகை!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; வத்திக்கான் பிரதிநிதி இலங்கைக்கு வருகை!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போக்குத் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வத்திக்கானின் வெளிவிவகாரப் பிரதிநிதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்ததாவது:-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இன்னும் நீதிநிலை நாட்டப்படவில்லை என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டை முன்வைத்த போது நான் வத்திக்கானில் இருந்தேன். வத்திக்கானில் பாப்பரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவரை சந்திப்பதற்காகவே நான் சென்றிருந்தேன். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விரிவாக உரையாடப்பட்டது. பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை நாம் கோரினோம்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விவாதத்தைக் கோரவுள்ளோம். மேற்படி சம்பவம் தொடர்பில் பேராயர் வெளியிட்ட கருத்து நீதியானது. ஏனெனில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் எந்தவொரு பரிந்துரையும் இந்த ஆட்சியின்கீழ் அமுலாகவில்லை. வத்திக்கானில் நடைபெற்ற சந்திப்புகளின்போதும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.
வத்திக்கானின் வெளிவிவகாரப் பிரதிநிதி எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்ரெம்பரில் இலங்கைக்கு வரவுள்ளார். மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவே அவர் வருகின்றார் – என்றார்.