இந்தியா
‘அரசுப் பள்ளிகளில் 23% மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தகவல்

‘அரசுப் பள்ளிகளில் 23% மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்’: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தகவல்
புதுச்சேரி, பாரதி பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற ‘ரௌத்திரம் பழகு – போதைப்பொருள் இல்லா புதுச்சேரி’ விழிப்புணர்வு நடை பயணத்தில் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் கலந்து கொண்டு போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடை பயணம் மேற்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் பேசுகையில், “நாம் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம். புதுச்சேரியில், குறிப்பாக அரசு பள்ளிகளில் 23 விழுக்காடு மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாக இருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்லுகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பற்றி வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். போதைப் பொருள் விற்கும் ஆசாமிகளை காவல்துறை கடுமையாக ஒடுக்கும். ஆனால் மாணவர்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். சக நண்பர்களையும் வழிநடத்த வேண்டும்.புதுச்சேரியில் இருக்கின்ற மாணவர்கள், இளைஞர்கள் அத்தனை பேரும் போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இயக்கமாக செயல்பட வேண்டும். ஒரு வளமான ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்கும் தகுதியும் திறமையும் உங்களுக்குள் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் திரு ராமலிங்கம், புதுச்சேரி காவல்துறையின் தலைமை காவல் ஆய்வாளர் திரு சத்திய சுந்தரம், சென்னை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கூடுதல் டிஜிபி திரு தீபக் கௌஷிக், பாரதி பவுண்டேஷன் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.