இலங்கை
மகள் கண் முன்னே நடந்த கொடூர கொலை ; தந்தையின் தகாத உறவால் நேர்ந்த அசம்பாவிதம்

மகள் கண் முன்னே நடந்த கொடூர கொலை ; தந்தையின் தகாத உறவால் நேர்ந்த அசம்பாவிதம்
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹராமை , உடுவில பிரதேசத்தில் நேற்று முன்தினம் (25) ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹராமை பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் உடுவில, மெதகிரிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொலைசெய்யப்பட்ட தந்தையின் மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதால் தந்தையும் 9 வயதுடைய மகளும் மாத்திரமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தந்தை மற்றுமொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.
சிறிது நாட்கள் சென்ற பின்னர் தந்தை, தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண்ணை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இதனால், தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கணவர் கொலைசெய்யப்பட்ட தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறின் போது சந்தேக நபரான கணவர், தந்தையை அவரது மகளின் கண்முன்னே வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கணவர் மெதகிரிபுர பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.