இலங்கை
தனியார் மற்றும் இ.போ.ச முறுகல் ; வடக்கில் முடங்கவுள்ள சேவைகள்

தனியார் மற்றும் இ.போ.ச முறுகல் ; வடக்கில் முடங்கவுள்ள சேவைகள்
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் செவ்வாயன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது.
இதனால் சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமூகமாக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து கருத்துக் கூறிய வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க தலைவர்,
இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று குறித்த சாலை முகாமையாளரின் உத்தரவுக்கமைய சட்டவிரோத சேவையை வவுனியா நோக்கி முன்னெடுக்க முயன்றது.
இதை அவதானித்த நாம் குறித்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டித்து அதை நிறுத்துமாறு வலியுறுத்தினோம். ஆனால் இ.போ.சவினர் அடாத்தாக சேவையை முன்னெடுக்க முயன்றனர்.
ஏற்கனவே இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்துள்ளோம்.
ஆனாலும் இதுவரை எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.
அத்துடன் இ.போ.ச அடாத்தாக சட்டத்துக்கு முரணாக செயற்படுவதுடன், தனியார் போக்குவரத்து சேவையை முடக்கவும் முயன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கும், முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் வலிந்து இழுக்கின்றனர்.
எனவே இவ்வாறான இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், மகாணம் தழுவிய ரீதியில் முழுமையான சேவை முடக்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.