இலங்கை
சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம்

சிறுவர்களின் 2 என்புத்தொகுதிகள் செம்மணியில் நேற்று அடையாளம்
இதுவரை 40 என்புத்தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு சிதிலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் எட்டாம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே, சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன. மேலும் நான்கு மண்டையோடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணிப் புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 34 மனிதச் சிதிலங்கள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.