உலகம்
Wayanad By Election: “உங்களின் குரலாக ஒலிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – வயநாடு மக்களுக்கு பிரியங்கா நன்றி!

Wayanad By Election: “உங்களின் குரலாக ஒலிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – வயநாடு மக்களுக்கு பிரியங்கா நன்றி!
2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் வயநாடு தொகுதியில் இருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிட்டன.
இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அதேநேரம் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிட்டனர். இன்றைய வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே பிரியங்கா காந்தி மற்ற வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிரியங்கா காந்தி மொத்தம் 6,22,338 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோகரி 2,11,407 வாக்குகளையும், பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 5,12,399 வாக்குகளையும் பெற்றனர்.
இதன் மூலம், பிரியங்கா 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். மேலும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.
ராகுல் காந்தி கடந்த 2019-ல் வயநாடு தொகுதியில் 4.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல், இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் அவர் 3.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results:இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் ஃபாலேயர்ஸ்… தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்ற பிரபல நடிகர்!
தற்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சகோதரர் ராகுல் காந்தியை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரியங்கா காந்தி, “இந்த வெற்றி உங்களின் வெற்றி என காலப்போக்கில் உணர்வீர்கள். உங்கள் பிரதிநிதியாக நீங்கள் தேர்ந்தெடுத்த நபர், உங்களின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் உணர்ந்து, உங்களுக்கான நபராக போராடுவேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.