இலங்கை
தமிழைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் எதிரணி! கடற்றொழில் அமைச்சர் கவலை

தமிழைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் எதிரணி! கடற்றொழில் அமைச்சர் கவலை
தமிழ்மொழியைக் கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ்மொழியில் பதிலளித்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
எனது தாய்மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்குத் தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ்மொழியை பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியைக் கொச்சைப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர்.
நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலைப் பார்க்கும்போது அவர்கள் என்ன கூறவருகின்றார்கள் என்பது தெரியும். தமிழ்மொழியில் பதிலளிக்கும் போது அந்த மொழியைக் கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்- என்றார்.