இந்தியா
திருவண்ணாமலையில் அச்சம்: மண்ணுக்குள் புதைந்த 2 வீடுகள்.. 7 பேரின் நிலை என்ன?

திருவண்ணாமலையில் அச்சம்: மண்ணுக்குள் புதைந்த 2 வீடுகள்.. 7 பேரின் நிலை என்ன?
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதேபோல், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், திருவண்ணாமலை மாநகராட்சியைச் சுற்றியுள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
இதற்கிடையே, திருவண்ணாமலையின் மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில், இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
அதில் ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதி, அவரது மகன், மகள் மற்றும் உறவினரின் மூன்று சிறுமிகள் என மொத்தம் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்றுமாலை வீடுகள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அவர்களால் மீட்புப்பணியை தொடர முடியவில்லை. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால், இரவு நேரம் என்பதால், மீட்பு பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.
இதனால், இரவு முழுவதும் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை. அதிகாலையே பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன.