இந்தியா
திருவண்ணாமலை மலைச்சரிவு… மீட்பு பணியில் ஐஐடி குழு – களத்தில் அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மலைச்சரிவு… மீட்பு பணியில் ஐஐடி குழு – களத்தில் அமைச்சர் வேலு
திருவண்ணாமலை மலைச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஐஐடி பேராசிரியர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மலைச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட அமைச்சர் எ.வ.வேலு, “ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது மூன்று நாட்களாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் கனமழை பெய்துள்ளது.
எனக்கு நினைவு தெரிந்து 1965-ஆம் ஆண்டுக்கு பிறகு திருவண்ணாமலையில் இப்போது தான் அதிகளவில் மழை பெய்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், 36 முகாம்கள் ஏற்பாடுகள் செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயல் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலசப்பாக்கம் தொகுதியில் இரண்டு குழந்தைகள், போளூர் தொகுதியில் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மலை என்பது கல்லும், மண்ணும் கலந்த மலை. இதுவரை இங்கு மலை சரிவு என்பது ஏற்பட்டதே இல்லை. மழையின் தாக்கம் இரண்டு நாட்களாக அதிகமாக இருந்ததால், மண் சரிவு ஏற்பட்டதால் சிறு சிறு பாறாங்கற்கள் உருள ஆரம்பித்தது.
மலையோரத்தின் கீழ் கட்டுப்பட்ட இரண்டு வீடுகளில் பாறாங்கற்கள் விழுந்தது. அதில் ஒரு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறிவிட்டனர். இன்னொரு வீட்டில் நான்கு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை, தாய், தந்தை என ஏழு பேர் சிக்கியிருப்பதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். எப்படியாவது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்றில் இருந்து முயற்சி செய்து வருகிறோம்.
இந்த இடர்பாடுகளை களைவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் அருகில் உள்ள அமராவதி அரசு பள்ளி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மலையில் ஒரு பாறை பெரியதாக இருக்கிறது. அந்த பாறை உருண்டு விழுந்தால், வீடுகளுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. மலைப்பாதைகளில் இதுபோன்ற சேதம் ஏற்படுகிறபோது, மலைகளை பிளந்து எடுக்கக்கூடிய சில வல்லுநர்கள் இருக்கிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவர்களை வரவைக்க வேண்டியதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று மதியத்திற்குள் இங்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.
மண்ணின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகு தான் அந்த பாறையை அகற்ற முடியும். பாறையை அகற்றும் போது அதிர்ச்சி ஏற்பட்டால் மேலும் சேதம் அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் வல்லுநர்கள் குழு பாறையை அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.
மேற்கொண்டு இங்கு எந்தவித அசம்பாவித சம்பவமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மண் மற்றும் மலையின் உறுதித்தன்மை ஆராய்வதற்காக சென்னை ஐஐடி பேராசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்திருக்கிறார். இன்று மதியத்திற்குள் அவர்களும் வந்துவிடுவார்கள்.
இடர்பாடுகளில் சிக்கியிருப்பவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத இடர்பாடுகளில் கூட உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறொம். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் மீட்பு பணியில், ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சரா? – செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
பியூட்டி டிப்ஸ்: முகம் கழுவ ஏற்றது சோப்பா… ஃபேஸ் (Face Wash) வாஷா?