பொழுதுபோக்கு
இது ஆடியோ ஃபங்ஷன் இல்ல, வடபழனி ஸ்டேஜ் மாதிரி இருக்கு; மேடையில் ரகளை செய்த செண்ட்ராயன்!

இது ஆடியோ ஃபங்ஷன் இல்ல, வடபழனி ஸ்டேஜ் மாதிரி இருக்கு; மேடையில் ரகளை செய்த செண்ட்ராயன்!
சமீபத்தில் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில், படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், சரவணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை, பிகைண்ட்வுட்ஸ் சேனல் தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் நடிகர் செண்ட்ராயன் கலந்து கொண்டு இப்படத்தில் பணியாற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, “சத்யஜோதி ஃபிலிம்ஸ் மிக பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம். அவர்களது நிறுவனம் தயாரித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ் இல்லையென்றால், இந்த மேடையில் நான் நிற்க முடியாது.ஏனெனில், ‘மூடர் கூடம்’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை முதலில் பாண்டிராஜ் தான் செய்வதாக இருந்தது. ஆனால், வேறு சில படங்களில் பணியாற்றியதால், அவர் அப்படத்தில் நடிக்கவில்லை. அதன் பின்னர், ‘மூடர் கூடம்’ படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆரம்பத்தில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியை பார்ப்பதற்கு சற்று பயமாக இருந்தது. ஆனால், ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்திற்கு அவர் மிகவும் பொருத்தமானவர். நிறைய பேருக்கு அவர் உதவி செய்து வருகிறார். இப்படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி விட்டன” என்று கூறினார். மேலும், ‘பொட்டல முட்டாய்’ பாடலை தனது குரலில் வேடிக்கையாக பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.தொடர்ந்து பேசிய அவர், “நித்யா மேனனை பார்ப்பதற்கு முதலில் டெரராக இருந்தது. ஆனால், அவரும் அன்பாக நடந்து கொண்டார். இவர்கள் மட்டுமின்றி என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றினர்” என்று தெரிவித்தார். இவ்வாறு செண்ட்ராயன் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால், அவரது அருகே இருந்த யோகிபாபு, “இதை பார்க்க ஆடியோ ரிலீஸ் ஸ்டேஜ் மாதிரி தெரியவில்லை; வடபழனி ஸ்டேஜ் மாதிரி இருக்கு” என்று கலாய்த்தார். இதைக் கேட்ட பார்வையாளர்கள் அரங்கம் அதிரும் வகையில் சிரித்தனர்.