இலங்கை
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் ஆடிப்பிறப்பு கொண்டாங்கள் இடம்பெற்ற நிலையில் மாணவர்கள் ஆடிக்கூழை அருந்தி மகிழ்ந்தனர்.
ஆடிப்பிறப்பானது வீடுகளில் மாத்திரமன்றி ஆலயங்கள், பாடசாலைகள், வேலை செய்யும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும், தமிழர்களின் ஏனைய பண்டிகைகளை போலவே கொண்டாடப்படுகிறது.
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.
இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும்.
இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும்.
தட்சணாயணத்தின் தொடக்க தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடை கால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது.
இந் நாளில் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உணவு வகைகளை விசேடமாகச் தயாரித்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார் உறவினர்களுக்கு இவ் உண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணல் என்பன வழக்கமாகும்.
அந்தவகையில் இன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் இந்த ஆடிப்பிறப்பு பண்டிகையானது, கல்லூரியின் முதல்வர் திருமதி.சுலபாமதி தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன்போது ஆடிக் கூழ் தயாரித்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் என அனைவரும் குடித்து மகிழ்ந்தனர்.