இலங்கை
சுற்றுலா பயணிகளுக்கான நவீன சேவை ; கட்டுநாயக்காவில் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்

சுற்றுலா பயணிகளுக்கான நவீன சேவை ; கட்டுநாயக்காவில் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பயணிக்கும் மக்களுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் புதிய நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் (service counter) ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இதன் மூலம், இலங்கை வந்தவுடன் வாகனங்களை இயக்க விரும்பும் வெளிநாட்டு பயணிகள், வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறையினை சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாமல், நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த முடியும்.
இது தொடர்பாக சமீப காலமாக வெளிநாட்டு பயணிகளிடையே ஏற்பட்டிருந்த எதிர்மறையான கருத்துகள் மற்றும் பத்திரம் பெறும் நடைமுறையின் சிரமங்கள் காரணமாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இந்த சேவை, எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, சுற்றுலா வளர்ச்சிக்கும், பயணிகள் வசதிக்கும் வழிவகுக்கும் புதிய கட்டமாகக் கருதப்படுகிறது.