இலங்கை
முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு தொடரும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு தொடரும் விளக்கமறியல்!
ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்டத்தில் ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 மில்லியன் ரூபாய் செலவில் வாங்கிய சோள விதைகளை சட்ட நடைமுறையை மீறி அந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஆதாயம் பெறும் நோக்கில் தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு விநியோகித்தாக எஸ்.எம். சந்திரசேன மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து அவர் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அத்துடன் கிராம மட்டத்தில் ஆதாரங்களாக இருக்கும் அரச அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும் என்றும் நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.