இலங்கை
ஐ.நா விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீசுக்காக குரல் கொடுக்கும் இலங்கை

ஐ.நா விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீசுக்காக குரல் கொடுக்கும் இலங்கை
பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் மீது விதிக்கப்பட்ட ஒருதலைப்பட்சத் தடைகள் குறித்து கவலை தெரிவித்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் பொலிவியா, பிரேசில், சிலி, சீனா, கொலம்பியா, கியூபா, ஹொண்டுரஸ், ஐஸ்லாந்து, நமீபியா, ஸ்லோவேனியா, தென்னாபிரிக்கா, ஸ்பெயின், இலங்கை, வெனிசூலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன், ஜெனீவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களும், இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
அல்பானீஸ் மற்றும் பிற ஐ.நா. நிபுணர்கள் மீதான சமூக ஊடகத் தாக்குதல்களை இந்த கடிதத்தின் ஊடாக கண்டித்துள்ள குறித்த நாடுகள், இது சர்வதேச சட்ட மீறல்களை அம்பலப்படுத்துபவர்களை இழிவுபடுத்தும் நியாயமற்ற முயற்சிகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குழு மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இத்தகைய நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையை அச்சுறுத்துவதாகவும் எச்சரித்துள்ளது.
இந்தக் கடிதம் 1946 ஆம் ஆண்டு ஐ.நா.வின் சலுகைகள் மற்றும் விடுபாட்டுரிமை தொடர்பான சாசனத்தை மேற்கோள் காட்டி, ஐ.நா. பொதுச் சபை தீர்மானம் 60/251 இன் படி ஐ.நா. விசேட நடைமுறைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபட உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குகளை ஊக்குவிப்பதற்கான அல்பானீஸின் முயற்சிகள் மற்றும் காசா மோதலில் இருந்து இலாபம் ஈட்டியதாகக் கூறப்படும் நிறுவனங்களை அடையாளம் காணும் அவரது அறிக்கைகள் காரணமாக, அமெரிக்காவினால் அவரது சொத்து முடக்கம் மற்றும் அவருக்கான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையிலேயே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.