உலகம்
ஷிண்டே vs பட்னவிஸ்… அடுத்த முதலமைச்சர் யார்? – மகாராஷ்டிராவில் போஸ்டர் யுத்தம்!

ஷிண்டே vs பட்னவிஸ்… அடுத்த முதலமைச்சர் யார்? – மகாராஷ்டிராவில் போஸ்டர் யுத்தம்!
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகாயுதி கூட்டணி, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில், தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேதான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று 31 சதவீதம் வாக்காளர்கள் விரும்புவதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின.
ஆனால், கூட்டணியில் பெரிய கட்சி என்ற அடிப்படையிலும் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சி என்ற அடிப்படையிலும் துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் தான் முதலமைச்சர் பதவிக்கு சரியான நபர் என்று பாஜக தலைவர் பிரவின் தரேகர் தெரிவித்திருந்தார். அவர்தான் அடுத்த முதலமைச்சர் என வசிம் நகரம் உள்ளிட்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
முதலமைச்சர் பதவிக்கு அஜித் பவார் தரப்பில் வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் அவரது முயற்சியில் தான் பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா கூட்டணி அமைந்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அமோல் மிட்காரி தெரிவித்தார்.
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அங்கே தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் “கிங் மேக்கர்” என்றும் கூறியிருந்தார். அடுத்த முதலமைச்சர் அஜித் பவார் தான் என போஸ்டர்களும் ஒட்டப்படுகின்றன. இதனால் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் அஜித்பவாரும் குதித்தார்.
இந்த நிலையில், 3 கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
அதே சமயம் மகாயுதி கூட்டணியில் அதிகபட்சமான இடங்களை பாஜக கைப்பற்றியதால், தேவேந்திர பட்னவிஸிற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.