இலங்கை
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு
2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து சமூகத்தில் தற்போது பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், இதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய 10 மற்றும் 11 ஆம் தரங்களில் கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவு செய்யப்படும் பாடப் பட்டியலில் சேர்ப்பதற்கே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சாதாரண தரத்தில் வரலாறு கட்டாயப் பாடமாக இருப்பது அவசியம் என்று அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் மற்றும் தென்னிலங்கை பிரதம சங்கநாயக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, வரலாறு மற்றும் தொல்பொருள் பாடங்களை பாடசாலைக் கல்வி முறையில் கட்டாயப் பாடங்களாகப் பேண வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் நேற்று (19) தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், வரலாற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தேரர்கள் குழுவொன்று, இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து குறித்த பாடப் பிரச்சினை குறித்து கலந்துரையாடி உள்ளனர்.