இலங்கை
செம்மணிப் புதைகுழியில் மீண்டும் இன்று அகழ்வு!

செம்மணிப் புதைகுழியில் மீண்டும் இன்று அகழ்வு!
அரியாலை, சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டப்பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித என்பு எச்சங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து அங்கு அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நீதிமன்றக் கண்காணிப்புடன் அகழ்வு நடவடிக்கைகள் இரு கட்டங்களாக நடைபெற்றிருந்தன.
இந்த அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான ராஜ் சோமதேவவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அகழ்வு நடவடிக்கைகளின்போது சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட் டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி வருகின்றனர்.
இதுவரை நடந்த அகழ்வு நடவடிக்கைகளில் 65 என்புத் தொகுதிகள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் என்புக் கூடுகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாக இறுதியாக நடந்த நீதிமன்ற வழக்கில் இதுவரை அகழ்வு நடவடிக்கைகளில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையில் “குற்றச்செயல்கள் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார். அங்கு மீட்கப்பட்டிருந்த என்புக் கூட்டுத் தொகுதி ஒன்று 4 அல்லது 5 வயதுடைய பெண் பிள்ளையினது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், செம்மணி சித்துப்பாத்தி மயான மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கையின் இரண்டாம் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.