இலங்கை
ஜனாதிபதி அநுரகுமாரவும் இனப்படுகொலையாளியே; அருட்தந்தை சக்திவேல் காட்டம்!

ஜனாதிபதி அநுரகுமாரவும் இனப்படுகொலையாளியே; அருட்தந்தை சக்திவேல் காட்டம்!
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலைகளுக்கு உடந்தையாகச் செயற்பட்டது என்பதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
சிங்கள – பெளத்த பேரினவாத ஆட்சியாளர் தமிழ் இனப்படுகொலைக்கான தருணம் பார்த்திருந்து, தமிழர்களுக்கு எதிராக பௌத்த பிக்குகளையும், அடித்தட்டு சிங்கள மக்களையும் ஏவி படுகொலைகளை மேற்கொண்ட கறுப்பு ஜூலைக் கலவரங்கள் இடம்பெற்று தற்போது 42 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் இனப்படுகொலைகள் நிகழவில்லை என்றும், புதைகுழிகளை அகழத்தேவையில்லை என்றும் தான் சிங்கள ஆட்சியாளர்கள் பலர் கூறுகின்றனர். அவர்கள், நீதி, நியாயம், உண்மை. பௌத்ததர்மம் என்பவற்றை சமூக புதைகுழிக்குள் தள்ளியதன் வெளிப்பாடாகவே இந்தக் கருத்துகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
இனப்படுகொலையின் உச்சம் 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தபோதும் அதில் திருப்தி கொள்ளாத சிங்களப் பேரினவாதம், தொடர்ந்தும் பல்வேறு வடிவங்களில் இன அழிப்பைத் தொடர்ந்தே வருகின்றது. தமிழர்களைப் பொறுத்தவரை 1983ஆம் ஆண்டின் ஜூலை மட்டுமல்ல கறுப்பு. இந்த நாட்டின் அரசமைப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் என்பவற்றோடு ஆட்சியில் அமரும் அத்தனை அரசாங்கங்களும் பேரினவாத கடும் கறுப்பே. இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எந்த நீதியும் கிட்டப்போவதில்லை -என்றுள்ளது.