இந்தியா
ஃபெஞ்சலின் கோர முகம்; நூலிழையில் உயிர் தப்பித்த நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர்கள் குழு!

ஃபெஞ்சலின் கோர முகம்; நூலிழையில் உயிர் தப்பித்த நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர்கள் குழு!
விழுப்புரம் மலட்டாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், மல்லட்டாறு வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டம், ஏமாப்பூர் அடுத்துள்ள பகுதியில் மூவர் சிக்கியிருப்பதாக நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர் குழுவிற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலைத் தொடர்ந்து நியூஸ்18 தமிழ்நாடு செய்தியாளர் குழு அந்தப் பகுதியை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பொழியத் துவங்கியது. ஏற்கனவே மல்லட்டாறு வெள்ளம் ஊர் முழுக்க பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றது.
அந்த வகையில், கடும் மழை, மின்சாரம் இல்லாமல் பாதை தெளிவில்லாத சூழலில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மூவர் குறித்து செய்தி வெளியிட்டு அவர்களுக்கு அரசு மூலம் உதவுவதற்காக சாலையில் வெள்ளம் செல்வதையும் தாண்டி நமது நியூஸ்18 அங்கு பயணித்தது. அப்போது, ஏமாப்பூர் பகுதி அருகே சென்றபோது அங்கு இருந்த சிலர் திடீரென ஓடிவந்து நமது வாகனத்தை நிறுத்தி, “இங்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு மேல் சென்றால், வாகனம் ஆற்று நீரில் அடித்துச் செல்லும் போக வேண்டாம்” என எச்சரித்து நம்மைத் தடுத்தனர்.
அவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வாகனத்தை ஓரமாக நிறுத்தி அந்தப் பகுதியைப் பார்த்தபோதுதான், அங்கு பெரும் வெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
பிறகு அங்கு நம்மை எச்சரித்து காப்பாற்றியவர்களிடம் பேசியபோது ஏமாப்பூர் அடுத்துள்ள ஊரில் சுமார் 50 பேர் வரை சிக்கியிருப்பதாகவும், அதில், மூவர் மட்டும் தனியாக ஒரு வீட்டில் சிக்கியிருப்பதாகவும், அந்த வீட்டைச் சுற்றி வேகமாக நீர் மேலேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், அரசும் விரைந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.