இந்தியா
தடை செய்யப்பட்ட அமைப்பினர் 7 பேர் கொலை! தெலங்கானாவில் பாதுகாப்புப் படை அதிரடி!

தடை செய்யப்பட்ட அமைப்பினர் 7 பேர் கொலை! தெலங்கானாவில் பாதுகாப்புப் படை அதிரடி!
தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முலுகு மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து செயலாளரான ரமேஷ் மற்றும் கூலி வேலை செய்துவந்த அர்ஜுன் ஆகிய இருவரும் தங்கள் வீட்டின் வெளியே பயங்கரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், இவர்கள் இருவரும் மாவோயிஸ்ட்கள் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கொடுத்ததால், மாவோயிட்கள் இவர்களை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் மட்டுமின்றி மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு பாதுகாப்புப் படையினரும், மாநில போலீஸாரும் தொடர்ந்து முலுகு மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
முலுகு மாவட்டத்தில், எதுர்நகரம் மண்டலத்திற்கு உட்பட்ட சல்பகா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவோயிஸ்ட் தடுப்பு படையினர் சல்பகா வனப்பகுதியில் தங்கள் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் மாவோயிஸ்ட்கள் சிலர் இருந்ததைக் கண்டனர்.
மாவோயிஸ்ட்களை தடுப்பு பிரிவினர் சரணடைய தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், தடுப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது, தடுப்பு படையினரும் மாவோயிஸ்ட்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கி சூட்டில் மொத்தம் ஏழு மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
இதில், யெல்லாண்டு-நர்சம்பேட்டை பகுதி மாவோயிஸ்ட் செயலாளராக இருந்து வந்த குருசம் மாங்கு என்கிற பத்ரு கொல்லப்பட்டது தெரியவந்தது. இவருடன் மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் சத்தீஸ்கரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏ.கே. 47, ஜி3 வகை துப்பாக்கிகளையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.