பொழுதுபோக்கு
என்ன நடந்தாலும் சரி, ரீடேக் வாங்கிடாதே; எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்: லியோ பட நடிகை ஜனனி பேச்சு!

என்ன நடந்தாலும் சரி, ரீடேக் வாங்கிடாதே; எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்: லியோ பட நடிகை ஜனனி பேச்சு!
விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்த நடிகை ஜனனி, தனது திரையுலகப் பயணம் குறித்தும், லியோ பட அனுபவம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது வாழ்க்கை எப்படி மாறியது, லியோ போன்ற ஒரு பெரிய படத்தில் நடித்த அனுபவம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தனது கருத்துகள் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, ஜனனிக்கு மிகுந்த மகிழ்ச்சியும், அதே சமயம் பயமும் இருந்ததாம். “உண்மையிலேயே நடக்குமா என்று நம்பவில்லை. ஷூட்டிங்கிற்குப் போகும்வரை ஒரு பயம் இருந்தது” என்று அவர் கூறினார். ஷூட்டிங் தளத்தின் செட், பாதுகாப்பு என அனைத்தும் புதிய அனுபவமாக இருந்ததால், முதலில் எப்படி நடிக்க வேண்டும் என்று பார்க்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டாராம்.”சார் அவ்வளவு ரீடேக் எடுக்க மாட்டாரு, அவருக்கு கஷ்டம் கொடுக்காத, முடிஞ்ச அளவுக்குப் பார்த்துக்கோ என்று கூறியிருந்தார்கள். எனக்கு நானே ரீடேக் வாங்கக் கூடாது என்று மனசுக்குள் இருந்தது” என்று ஜனனி லியோ பட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். விஜய்யுடன் நடித்தபோது, ஆரம்பத்தில் பேசப் பயமாக இருந்ததாகவும், அவரே வந்து “ஹாய்மா” என்று கூறியதும் பயம் நீங்கியதாகவும் தெரிவித்தார்.எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய ஜனனி, நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய விரும்புவதாகவும், குறிப்பாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். “சைக்கோ, வில்லி, ரக்கட் கதாபாத்திரங்கள் செய்ய ஆசை” என்று அவர் கூறியுள்ளார்.ஆங்கராக தனது பயணத்தைத் தொடங்கிய ஜனனி, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் தோன்றினார். “நான் இங்க இருப்பதற்குக் காரணமே பிக்பாஸ் தான். அதில் வந்ததால்தான் நிறைய பேருக்கு என்னை தெரிந்தது. பிக்பாஸ் எனக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தது” என்றும் அவர் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த பல இயக்குநர்கள் அவரை அணுகி, குறிப்பிட்ட எக்ஸ்பிரஷன்களைப் பயன்படுத்த விரும்பியதாகவும், சில சமயங்களில் அந்த எக்ஸ்பிரஷன்கள் எந்தச் சூழலில் வந்தன என்பதைத் தனக்கே தெரியாது என்றும் அவர் வேடிக்கையாகத் தெரிவித்தார்.