Connect with us

இலங்கை

சர்வதேச பொறுப்புக்கூறல் குறித்து தீர்மானிக்கவுள்ள தமிழரசுக்கட்சியின் தீர்மானம்

Published

on

Loading

சர்வதேச பொறுப்புக்கூறல் குறித்து தீர்மானிக்கவுள்ள தமிழரசுக்கட்சியின் தீர்மானம்

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்து வெள்ளிக்கிழமை (1) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என்பன கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டிருந்தன.

Advertisement

அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அதில் பங்கேற்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருப்பதாகப் பதிலளிக்கப்பட்டது.

இருப்பினும் தாம் அனுப்பிவைக்கவுள்ள வரைபினைத் தயாரிக்கும் பணிகள் இவ்வாரத்துக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும், அவ்வரைபு தமிழரசுக்கட்சிக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை (1) கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவிட்ஸர்லாந்து நாட்டின் தேசிய தின நிகழ்வைத் தொடர்ந்து, அதே ஹோட்டலிலேயே இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (தமிழ்த்தேசிய பேரவை) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

Advertisement

அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும், தமிழ்த்தேசிய பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும், சிவில் சமூகம் சார்பில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மற்றும் பி.என்.சிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள கடிதம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததுடன் அவ்விடயங்களுடன் உடன்படும் பட்சத்தில் அதுபற்றி விரைவில் ஒரு முடிவை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (1) யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவிப்பதாகக் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன