இந்தியா
Fengal Cyclone Relief | புயல் நிவாரணம் அறிவிப்பு : யார், யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? – முழு விவரம் இதோ!

Fengal Cyclone Relief | புயல் நிவாரணம் அறிவிப்பு : யார், யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? – முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டை புரட்டிப் போட்டி ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்டோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதேபோன்று சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயும்,
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டார்.
மழையினால் 33 விழுக்காட்டிற்கு மேல் பாதிப்படைந்த நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாயும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காட்டிற்கு மேலாக சேதமடைந்திருப்பின் ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதேபோன்று 33 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட மானாவரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8 ஆயிரத்து 500 ரூபாயும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்திருக்கும்பட்சத்தில் 37 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்க அறிவுறுத்தினார்.
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாயும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக 100 ரூபாயும் வழங்க உத்தரவிட்டார்.
அதி கனமழை காரணமாக கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலுர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ் வழங்கவும், மழையால் பாதிகப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அத்துடன் நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கும்படி முதலமைச்சர் அறிவுறுத்தினார்.