இலங்கை
ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல – ஆனந்த விஜேபால விளக்கம்!
ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல – ஆனந்த விஜேபால விளக்கம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும், அது நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாடு என்றும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது பேசுபொருளாக மாறியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாரையும் கைது செய்வதோ? அல்லது அவரை விளக்கமறியலில் வைப்பதோ? என்பது குறித்து நானோ அல்லது அரசாங்கமோ தீர்மானிப்பது இல்லை.
அத்துடன், எதிர்தரப்பினர் அனைவரும் ஓர் அணியில் இணைவார்கள் என்பதை அறிந்திருக்கின்றோம், குறித்த கூட்டணியால் அரசாங்கத்திற்கு எவ்வித சவாலையும் ஏற்படுத்த முடியாது.
யாரேனும் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுமாயின் அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் எடுக்கும்.
அத்துடன், இங்கு யாருடைய ஜனநாயக உரிமையும் பறிக்கப்படவில்லை, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமையே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொள்ளையடித்து, ஊழல் செய்வோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுப்பதை, ஜனநாயக உரிமை மீறப்படுவதாக கூற முடியுமா?
அத்துடன், இந்த கைது ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ முன்னெடுத்த நடவடிக்கை அல்ல, இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை புரிந்துகொள்ள முடியாது எனின், எதனையும் செய்ய முடியாது, அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்திருந்தால் அதனை நீதிமன்றத்திடம் எடுத்துரைக்க முடியும்” என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
