இலங்கை
குறுகிய அரசியல் நோக்கங்களே எதிரணி இணைவுக்கு காரணம்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
குறுகிய அரசியல் நோக்கங்களே எதிரணி இணைவுக்கு காரணம்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!
சட்டம் தனது கடமையை சரிவரச் செய்யும்போது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன. மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும். இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்பு அலகும், முயற்சியாண்மைக் கற்கைநெறி மாணவர்களும் இணைந்து நடத்திய உலக முயற்சியாளர் தின விழாவும். மாபெரும் வர்த்தக சந்தையும் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- ஊழல்வாதிகளுக்கு எதிராக கட்டாயம் சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தேங்காய் திருடினாலும் குற்றம் தான். மாங்காய் திருடினாலும் குற்றம் தான். டயமன்ட் திருடினாலும் குற்றம் தான். அது சிறிய குற்றம், இது பெரிய குற்றம் எனக் குற்றத்தைப் பிரித்துப் பார்ப்பது கூடக் குற்றம் தான்.
கடந்தகாலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. அதனாலேயே தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக கள்வர்கள் கூட்டுச் சேர்ந்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களைக் காப்பதற்கான கூட்டணியாகும்.
ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றிக் கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பான செயலாகும். நாட்டில் இன்று நீதிக் கட்டமைப்பு சுயாதீனமாகச் செயற்படுகின்றது. எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லை. சட்டம் தனது கடமையைச் செய்வதற்குரிய வளங்களை நாம் வழங்கி வருகின்றோம். ஜனநாயகம் பற்றி எதிரணிகள் எமக்குப் பாடம் எடுக்கவேண்டியதில்லை. ஜனநாயகம் என்றால் என்ன வென்பதை செயலில் காட்டியவர்கள் தான் நாம். கடந்த இரு தேர்தல்களின் போது ஜனநாயகம் எப்படிப் பாதுகாக்கப்பட்டது என்பதை முழு உலகமும் அறியும் – என்றார்.
