இலங்கை
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வடக்கிற்க்கான விஜயத்தின் போது இன்று(02) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த அவர் புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில் நண்பகல் அளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மிக நீண்டகால கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பாலத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்க வந்திருந்த ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் வரவேற்றிருந்தார்.
தொடர்ந்து பாலத்திற்கான நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மற்றும் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
