உலகம்
Maharashtra Election Results: மகாயுதி கூட்டணி வெற்றிக்கு வித்திட்ட 3 காரணிகள்… வாக்குகளை அள்ளிக் கொடுத்த மகாராஷ்டிரா பெண்கள்!

Maharashtra Election Results: மகாயுதி கூட்டணி வெற்றிக்கு வித்திட்ட 3 காரணிகள்… வாக்குகளை அள்ளிக் கொடுத்த மகாராஷ்டிரா பெண்கள்!
மகாராஷ்டிராவில் பாஜகவின் மகாயுதி கூட்டணி வெற்றிவாகை சூடியதற்கு பெண்களின் வாக்குகள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதன்படி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை விட, தற்போது 53 லட்சம் பெண்கள் அதாவது 6 சதவிகிதம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். பெண்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்ற ‘லட்கி பெஹன் யோஜனா’ திட்டத்தில் பயனடைந்தவர்கள் மகாயுதி கூட்டணியை தேர்வு செய்துள்ளனர்.
இத்திட்டத்தில் 2.5 கோடி பெண்களுக்கு தேர்தல் வரை தலா ரூ.1,500 வீதம் ஐந்து தவணையாக வழங்கப்பட்டது. மேலும் இது விரிவுப்படுத்தப்பட்டு, ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும் என மகாயுதி கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.
எனினும் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அளித்த வாக்குறுதியை பெண்கள் புறந்தள்ளியுள்ளனர். பெண்கள் மட்டுமல்லாமல் விவசாயிகளும் பெருவாரியாக பாஜக தலைமையிலான கூட்டணியை ஆதரித்துள்ளனர்.
பருத்தி மற்றும் சோயாபீனுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதி அக்கூட்டணிக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளது.
வழக்கமாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்காத பாஜக, இத்தேர்தலில் அதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தது. இதன் காரணமாக விவசாயிகள் அதிகம் வாழும் விதர்பாவில் ஜாக்பாட் அடித்துள்ளது.