உலகம்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் ஒரு பெண் பணயக்கைதி சாவு!

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் ஒரு பெண் பணயக்கைதி சாவு!
காசாவின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு காசா நகரின் சுஜையா பகுதியில் அது புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
காசாவில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 120 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் நேற்று முன்தினம் கூறிய நிலையிலேயே புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய காசாவின் அல் மகாசி மற்றும் அல் புரைஜ் அகதி முகாம்களில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வான் தாக்குதல்களில் நான்கு சிறுவர்கள் உட்பட ஏழு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன ஊடகம் குறிப்பிட்டது.
வடக்கு காசாவில் இஸ்ரேலியப் படை கடந்த 51 நாட்களாக முற்றுகையில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்குள்ள ஜபலியா அகதி முகாமில் இருந்து வெளியேற முயன்றவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் நேரடியாக சூடு நடத்திய சம்பவம் ஒன்றில் பலரும் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நுஸைரத் அகதி முகாமின் மேற்காக உள்ள அல் ரஹ்மா பகுதியின் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவமான வபா தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்கு காசாவில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் அங்கு தடுத்து வைத்திருந்த இஸ்ரேலிய பெண் பணயக்கைதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் அபூ ஒபைதா குறிப்பிட்டுள்ளார்.
‘பணயக்கைதிகளை பாதுகாப்பதற்காக பணியமர்த்தப்பட்டவர்களுடனான தொடர்பு பல வாரங்களுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நிலையில் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பணயக்கைதியான பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மற்றொரு பெண் பணயக்கைதி படுகாயத்திற்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பணயக்கைதிகளின் உயிர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவே பொறுப்பாவார் என்றும் அபூ ஒபைதா குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட 250க்கும் அதிகமான பணயக்கைதிகளில் 100க்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதோடு இதில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஹமாஸ் அமைப்புடன் உடன்பாடு ஒன்றை செய்துகொள்ள வலியுறுத்தி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு எதிராக டெல் அவிவில் இஸ்ரேலியர்கள் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேலியப் படை காசா மீது இடைவிடாது நடத்தும் தாக்குதல்கள் காரணமாக அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 44,211 ஆக அதிகரித்திருப்பதோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
காசா போர் பிராந்தியத்தில் போர் சூழலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஜோர்தான் தலைநகர் அம்மானில் கடும் பாதுகாப்புக் கொண்ட இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒன்றில் துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதோடு மூன்று ஜோர்தானிய பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
நேற்றுக் காலை இடம்பெற்ற இ;ந்த சம்பவத்தில் துப்பாக்கிதாரி இஸ்ரேலிய தூதரகம் பக்கமாக பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்றின் மீது சூடு நடத்தியுள்ளார். இதனையடுத்து தானியக்க துப்பாக்கியுடன் இருந்த அந்த துப்பாக்கிதாரியை ஒரு மணி நேரமாக துரத்திய பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் சம்பவம் என்று ஜோர்தான் தொடர்பாடல் அமைச்சர் முஹமது மொமானி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் காணாமல்போன இஸ்ரேலிய ஆடவர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை கொடூரமான யூத எதிர்ப்பு பயங்கரவாதச் செயல் என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
யூத மதகுரு ஒருவரான சிவி கொகன் கடந்த வியாழக்கிழமை டுபாயில் காணாமல்போன நிலையிலேயே அவர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐக்கிய அரபு இராச்சியம் செல்வதற்கு இஸ்ரேலியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிப்பதோடு ஹிஸ்புல்லா போராளிகள் பதிலுக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தெற்கு லெபனானில் உள்ள இராணுவ நிலையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் லெபனான் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 18 பேர் காயமடைந்திருப்பதாக லெபனான் இராணுவம் நேற்று குறிப்பிட்டது.
முன்னதாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேல் நடத்திய சரமாரி வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருப்பதோடு குறைந்தது 66 பேர் காயமடைந்துள்ளனர்.