இந்தியா
Fengal Cyclone: 90 கி.மீ. வரை தரைகாற்று வீசும்! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

Fengal Cyclone: 90 கி.மீ. வரை தரைகாற்று வீசும்! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘ஃபெஞ்ஜல்’ (Fengal) என பெயரிடப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து 260 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் இருக்கும் ஃபெஞ்ஜல் புயல், தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது.
இந்தப் புயல் நாளை பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் புயலின் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைமுகத்திலும், ஒவ்வொரு எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், புயலின் காரணமாக இன்றும் நாளையும் தரைகாற்று பயங்கரமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29-11-2024: வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
30-11-2024: வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசகூடும்.