இலங்கை
மன்னார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் மரணம் – உறவினர்கள் போராட்டம்!

மன்னார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் மரணம் – உறவினர்கள் போராட்டம்!
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட தாய் ஒருவரும் சிசுவும் உயிரிழந்தமையை அடுத்து அங்கு நேற்று அமைதியின்மை ஏற்பட்டது.
மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மருத்துவமனைத் தரப்பினரின் கவனக் குறைவு காரணமாகவே பெண்ணும் சிசுவும் உயிரிழந்தனர் என்று குற்றஞ்சாட்டும் அவரது உறவினர்கள், மருத்துவமனையில் எதிர்ப்பில் ஈடுபட்டதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
உண்மை வெளிப்படுத்தப்படும் வரையில் அவரது உடலைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் எனவும் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.