இந்தியா
Senthil Balaji | ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன்? செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Senthil Balaji | ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன்? செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
செந்தில் பாலாஜி
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.
அதன்பிறகு செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதால், அவரது பிணையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அமைச்சர் பொறுப்பில் செல்வாக்கு மிக்க நபராக செந்தில் பாலாஜி இருப்பதால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் எனவும், லஞ்சம் கொடுத்தவர்கள் மற்றும் லஞ்சம் பெற்றவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தி வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், செந்தில் பாலாஜிக்குக் கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்களின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என்றும், வழக்கில் சம்பந்தப்பட்டவர் அமைச்சராகப் பதவியேற்றால் சாட்சிகள் அச்சப்பட வாய்ப்புள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளபோது ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராகப் பதவியேற்றது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, இதற்குப் பதிலளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.