இந்தியா
இருக்கை யாருக்கு? டிச. 4ல் வெளியாகிறது மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

இருக்கை யாருக்கு? டிச. 4ல் வெளியாகிறது மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகள். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
இவ்வளவு பெரிய வெற்றி பெற்று, தேர்தல் முடிவுகள் வந்து ஒரு வாரத்தை கடந்த நிலையிலும், அந்த மாநிலத்தில் இன்னும் புதிய அமைச்சரவையும் முதல்வரும் யார் என்பது முடிவு எடுக்கப்படாமல், பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
கடந்த வாரம், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவருடனும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து சி.என்.என். நியூஸ்18-க்கு கிடைத்த தகவலின்படி, ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவையில் தனது சிவசேனாவிற்கு 12 அமைச்சர் பதவிகளை கேட்டிருக்கிறார்.
பாஜக எப்போதும்போல், இரு துணை முதல்வர்களுடன் ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், தேவேந்திர ஃபட்னாவிஸ் பெயர் தான் முதல்வர் பொறுப்புக்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல், இரு துணை முதல்வர்களில் ஒன்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்க பேசப்பட்டது. ஆனால், அவர் அதனை மறுத்துள்ளார். மேலும், அந்தப் பதவிக்கு தனது மகன், ஸ்ரீகாந்தை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மற்றொரு பக்கம் அஜித் பவார் ஒரு துணை முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதி என்கின்றனர்.
அஜித்பவார் துணை முதல்வர் பதவி மட்டுமின்றி, நிதி, சிறுபான்மைத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளையும் கேட்டு வருகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி, வரும் டிசம்பர் 7-ம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் வரும் 4ம் தேதிய முதல்வர் யார் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி 5ம் தேதி மும்பையில் பதவி ஏற்பு விழா நடக்கும் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மும்பையில் கூட இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் மத்திய பார்வையாளர்களாக நியமித்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
எனவே நாளை மும்பையில் நடக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் யார் என்பதும், முதலமைச்சர் யார் என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை (4ம் தேதி) முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படுவார் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் 5ம் தேதி முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்கும் என்றும், அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், நாளை நடக்க இருக்கும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியான முடிவு வெளியாகும் என அரசியல் நோக்கர்கள் காத்திருக்கின்றனர்.