இந்தியா
சிறு வணிகர்களுக்கு ரூ.10,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் – அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்பு

சிறு வணிகர்களுக்கு ரூ.10,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கடன் – அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்பு
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்ங்களை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த சிறப்பு முகாம்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக நடைபெறும் என்றும், முகாம் மூலமாக தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை சிறுவணிகக்கடன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம்கள் இன்று முதல் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.