இந்தியா
தீபத் திருவிழா : திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!

தீபத் திருவிழா : திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்று (டிசம்பர் 7) உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் காரத்திகை தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தங்க மர கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
இதையடுத்து முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் வரும் 13 ஆம் தேதி காலை 4 மணிக்கு அண்ணாமலையர் கோவிலின் முன் பரணி தீபமும், அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை மகா தீபத்தை பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இதனை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் இன்று அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மகாதீபத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 16,000 போலீசார்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள் தங்குவதற்கு திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 156 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்படுத்தப்பட உள்ளது.
இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு வரும் 8 முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.