இந்தியா
EWS: “வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைகளையும் அனுபவிக்காதவர்களுக்கு இட ஒதுக்கீடு” மேனாள் நீதிபதி காட்டம்

EWS: “வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைகளையும் அனுபவிக்காதவர்களுக்கு இட ஒதுக்கீடு” மேனாள் நீதிபதி காட்டம்
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, இதுவரை சமூகத்தால் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தால் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு எனும் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இதன் மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்துவந்தது. இந்த அமர்வில், அன்றைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா, ரவீந்திர பட் இடம் பெற்றிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும், தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவரும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தனர். 3:2 என்ற அடிப்படையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றானது.
இதனையடுத்து தற்போது பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தற்போது பின்பற்றப்பட்டுவருகிறது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்காது என்று அறிவித்தது. அதேசமயம், கேரளா கம்யூனிஸ்ட் அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு வரவேற்பு அளித்து நடைமுறைப்படுத்திவருகிறது.
இந்த நிலையில், இன்று (8ம் தேதி) கேரளா மாநில உயர் நீதிமன்றத்தில், மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் 10ம் ஆண்டு நினைவு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியிருப்பதாவது; “இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீட்டுக்காக ஒருவரின் பொருளாதார நிலையை, அரசியல் சாசன வரைக்குழுவில் இருந்தவர்கள் பரிசீலிக்கவே இல்லை.
உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவோர் வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்கு முறைகளையும் அனுபவித்தது இல்லை. உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்லாது, தார்மீக ரீதியாகவும் தவறானது” என்று பேசியுள்ளார்.