சினிமா
Allu Arjun Arrest | அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Allu Arjun Arrest | அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “புஷ்பா 2”. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர்.
இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று தனது வீட்டில் வைத்து அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கைதான அல்லு அர்ஜுனுடன் போலீசார் விசாரணை நடத்தியபின், நம்பள்ளிகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த 4ம் தேதி சந்தியா தியேட்டர் அருகே நடந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் வழக்கில் ஏ11 ஆக இருந்த அல்லு அர்ஜுன் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்த மாஜிஸ்திரேட், அல்லு அர்ஜுனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். ஆனால் நம்பள்ளி நீதிமன்ற தீர்ப்புக்கு முன், உயர் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்ற வாதத்தை அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்கள் பரிசீலித்து வருகின்றனர். தள்ளுமுள்ளு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ரத்து மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகுதான் அல்லு அர்ஜுன் சிறைக்கு அனுப்பப்படுவாரா இல்லையா என்பது தெரியவரும்.