இந்தியா
கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய குற்றவாளி உயிரிழப்பு

கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்; முக்கிய குற்றவாளி உயிரிழப்பு
அல் உம்மா இயக்க நிறுவனரும், கோவை குண்டு வெடிப்பின் முதல் குற்றவாளியுமான பாட்ஷா உயிரிழந்தார்.
கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. ஆர்.எஸ்.புரம், உக்கடம் உள்பட 12 கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் 11 இடங்களில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன.
இதில், 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 46 பேர் கொல்லப்பட்டனர். 2000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, பொதுச் செயலாளர் அன்சாரி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாட்ஷாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த பாட்ஷா கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி பரோலில் வந்தார்.
கடந்த சில மாதங்களாக பரோலில் இருந்து வரும் பாட்ஷா உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகலுக்குப் பிறகு, சிகிச்சையில் இருந்த பாட்ஷாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து பாட்ஷாவை உறவினர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 6.20 மணிக்கு அவர் உயிரிழந்தார். உக்கடம் அன்பு நகரில் உள்ள அவரது இல்லத்தில் பாட்ஷா உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வருகின்றனர். நாளை பூ மார்க்கெட் ஹைதர் அலி திப்புசுல்தான் கபஸ்தானில், பாட்ஷாவின் உடல் மாலை 4 மணி அளவில் அடக்கம் செய்யப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.