வணிகம்
Red sandalwood: லட்சங்களில் லாபம் தரும் செம்மரம் சாகுபடி… விவசாயிகள் பயன்பெறுவது எப்படி தெரியுமா…

Red sandalwood: லட்சங்களில் லாபம் தரும் செம்மரம் சாகுபடி… விவசாயிகள் பயன்பெறுவது எப்படி தெரியுமா…
லட்சங்களில் லாபம் தரும் செம்மரம் சாகுபடி… விவசாயிகள் பயன்பெறுவது எப்படி தெரியுமா…
விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் நிலம் வாங்கி அன்றாடம் அதில் ஈடுபட முடியாதவர்கள் அல்லது ஊரில் கிடக்கும் நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என வெளியூரிலிருந்து சிந்திப்பவர்கள் ஈடுபடும் விவசாயம் தான் மரப்பயிர் விவசாயம்.
இந்த மரப்பயிர் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலும் தேக்கு, சந்தனம் போன்ற மரங்களை வளர்த்து லாபம் பார்ப்பார்கள். இந்த மரங்கள் மட்டுமின்றி மரப்பயிர் விவசாயத்தில் பெரும் லாபம் ஈட்டச் செய்யும் மர வகை தான் செம்மரம்.
முன்பெல்லாம் செம்மரம் என்றவுடன் செம்மரக்கடத்தலும், ஆந்திர அரசின் நடவடிக்கைகளும் தான் நினைவுக்கு வரும். அந்த வரிசையில் மக்கள் மத்தியில் தற்போது புஷ்பா படமும் செம்மரம் குறித்து மக்களைத் தேடச் செய்துள்ளது.
செம்மரம் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் செம்மரம் வளர்த்து எப்படி லாபம் ஈட்டுவது என்ற கேள்வி வரலாம். தமிழ்நாட்டில் செம்மரம் வளர்த்து, அதை விற்பனை செய்யச் சில கட்டுப்பாடுகள் உள்ளது தான். ஏனெனில் செம்மரம் , தேக்கு, சந்தனம், கருங்காலி போன்றவை பட்டியல் மரங்களாக உள்ளது.
பொதுவாக மரப் பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்து விட்டால், மரக்கன்றுகளை நட்டு விட்டு கிராம நிர்வாக அலுவலரை அணுகி மரக்கன்றுகளைப் பதிவேட்டில் பதிவு செய்யச் சொல்ல வேண்டும். செம்மரத்திற்கும் இதே தான். செம்மரம் மானாவாரி நிலங்களிலும் நன்கு வளரக் கூடியது. நட்டு வைத்து ஒரு சில ஆண்டுகள் தண்ணீர் ஊற்றிப் பராமரித்தாலே போதும் பின்னர் நன்கு வளர்ந்து விடும்.
20 ஆண்டுகளுக்குப் பின் மரத்தினை வெட்டிக்கொள்ளலாம். அப்படி வெட்டுவதற்கு முதலில் வனத்துறையிடம் முறையாக அனுமதி பெறுவது அவசியமாகிறது. படிவம் 2 விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை இணைத்து வனத்துறையிடம் அனுமதி பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பட்டியல் மரங்களைத் தவிர இதர மரங்களுக்குக் கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்றாலே போதுமானது. விதிகளை முறையாகப் பின்பற்றினால் செம்மரம் வளர்ப்பில் கோடிக் கணக்கில் லாபம் ஈட்ட முடியும். செம்மரங்களுக்குச் சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பெரும் தேவை உள்ளது.
பசுமை தமிழ்நாடு இயக்கத் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் கூட செம்மரம் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள் எனக் கூறி இருந்தார். இதன்படி அரசின் நாற்றங்கால் பண்ணைகளில் செம்மரக்கன்றுகளும் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.