இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டம்; தற்போது 30 பேர் சிறையில்!

பயங்கரவாதத் தடைச்சட்டம்; தற்போது 30 பேர் சிறையில்!
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 24 பேரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாகக் கேட்டுப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களைவிட, 34 பேர் வழக்குத் தொடரப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை வழக்குத் தொடரப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49ஆகவும், 2020 முதல் 2023ஆம் வரையான ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முழுமையாக விடுவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81ஆகவும் காணப்படுகின்றது.
அதேபோன்று உயிர்த்தஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விட, 34 பேர் வழக்குத் தொடரப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 54 பேர் வழக்குத் தொடரப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2019 முதல் 2023 வரையான காலப்பகுதியில் 365 பேர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)