இந்தியா
Pushpa 2: ‘புஷ்பா 2’ நெரிசலில் சிக்கிய 8 வயது சிறுவன் மூளைச்சாவு.. ஹைதராபாத்தில் சோகம்!

Pushpa 2: ‘புஷ்பா 2’ நெரிசலில் சிக்கிய 8 வயது சிறுவன் மூளைச்சாவு.. ஹைதராபாத்தில் சோகம்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் (இம்மாதம் 4ம் தேதி) திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.
இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
மேலும், அச்சிறுவனுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வருவதாகவும், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது ஆகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அச்சிறுவன் மூளைச்சாவு அடைந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த 14 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . கூட்ட நெரிசலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில் தற்போது மகனும் மூளைச்சாவு அடைந்தது என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.