இலங்கை
சத்திரசிகிச்சையின் பின் பறிபோன ஒன்பது வயது சிறுவனின் உயிர்!

சத்திரசிகிச்சையின் பின் பறிபோன ஒன்பது வயது சிறுவனின் உயிர்!
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திர சிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு மருத்துவமனை ஊழியர்களே காரணம் என சிறுவனின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அங்குருவத்தோட்ட பெத்திகமுவ ஹல்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த தனுஜா விக்கிரமாராச்சி என்ற 9 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு மயக்க நிலையில் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சத்திரசிகிச்சைக்குப் பின்னரும் சிறுவன் சுயநினைவு பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுடன் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மிரிஹான பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.