இலங்கை
பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு

பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். அவர் சந்தேகத்துக்கு இடமான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டமையால் இறப்புச் சம்பவித்திருக்கலாம் என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளின் அடிப்படையில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்துவந்த வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த 45வயதுடைய சந்திரகுமார் சந்திரபாலன் என்பவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து அவர் ஊறணி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதிவான் திருமதி விஜயராணி உருத்திரேஸ்வரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைத்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் நேற்று இடம்பெற்ற நிலையிலேயே, ஒருவகை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டமையால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிகப் பகுப்பாய்வு நடவடிக்கைக்காக மாதிரிகள் பெறப்பட்டு அவை கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.