இலங்கை
11 வயது மாணவனுக்கு நடந்த துயரம்; பெற்றோர் எடுத்த முடிவு

11 வயது மாணவனுக்கு நடந்த துயரம்; பெற்றோர் எடுத்த முடிவு
பாடசாலை விளையாட்டு மைதானத்திலிருந்த கால்பந்து கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் 11 வயது மாணவர் ஒருவர், உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் கவிந்து தெனுவன் எனும் மாணவன் , நேற்று மாலை தனது அக்காவின் விளையாட்டுப் போட்டியைக் காண மைதானத்திற்கு சென்றுள்ளார்.
தனது தாயாருடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர், மைதானத்திலிருந்த கோல் கம்பத்தை அகற்ற ஒரு குழு வருவதைக் கண்டு அவர்களுடன் சேர்ந்து சென்றுள்ளார்.
இதன்போது கோல் கம்பத்தைத் தூக்க முயன்றபோது, ஒரு பக்கம் துருப்பிடித்திருந்த கோல் கம்பத்தின் ஒரு பகுதி கவிந்துவின் தலையில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவனை பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்ற போது மாணவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவரின் பெற்றோர் அவரது கண்கள் உட்பட உடல் உறுப்புகளை தானம் செய்யத் தீர்மானித்துள்ளனர்.