உலகம்
எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம்!

எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம்!
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2016 இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[ஒ]