Connect with us

இந்தியா

உத்தரகாண்ட் பனிச்சரிவு: 49 தொழிலாளர்கள் மீட்பு; 8 பேரை தேடும் பணி தீவிரம்

Published

on

Uttarkhand

Loading

உத்தரகாண்ட் பனிச்சரிவு: 49 தொழிலாளர்கள் மீட்பு; 8 பேரை தேடும் பணி தீவிரம்

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள மானாவில் எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) திட்ட பணிகளின் போது பனிச்சரிவு ஏற்பட்டது. இந்நிகழ்வு நடந்த ஒரு நாளுக்கு பின்னர், 49 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இத்தகவலை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Day after Uttarakhand avalanche, 49 workers rescued; search on for 8 நிலைமையை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.முன்னதாக சனிக்கிழமையன்று, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் வினோத் குமார் சுமன், “எங்களால் 47 பேரை மீட்க முடிந்தது. மீதமுள்ள எட்டு தொழிலாளர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.மானா கிராமம் மற்றும் மானா பாஸ் இடையேயான சாலைத் திட்டத்திற்கான செயல்பாடுகளுக்கு முன்னதாக, ஒரு ஒப்பந்ததாரரால் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். சம்பவம் நடந்தபோது அவர்கள் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்ததாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். “வெள்ளிக்கிழமை சம்பவம் நடந்தபோது காலை 7.15 மணியளவில் அவர்கள் எட்டு பதுங்கு குழிகளில் இருந்தனர், நாங்கள் இவற்றிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்றுகிறோம்” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.மீட்பு நடவடிக்கை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. காயமடைந்த ஆறு தொழிலாளர்கள் ஜோஷிமத்தில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மானாவில் உள்ள ஐ.டி.பி.பி மருத்துவமனையில் இருந்து ஜோஷிமத் மருத்துவமனைக்கு மூன்று பேர் விமானம் மூலம் அனுப்பப்பட்டனர் என்று சாமோலி மாவட்ட மாஜிஸ்திரேட் சந்தீப் திவாரி தெரிவித்துள்ளார். “மூன்று பேர் இப்போது சீரான நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 28 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். வானிலை இப்போது தெளிவாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பனிப்புயல் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாக முதல்வர் தாமி கூறினார். “மாநிலத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு நிலவரம் குறித்த விரிவான தகவல்களை அவர் கேட்டுக் கொண்டார். இதன் போது, ​​எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் உறுதியளித்தார்” என்று தாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மானாவில் அதிகாரிகளுடன் பேசியதாகவும், அந்த இடத்தைப் பார்வையிட சாமோலிக்குச் செல்வதாகவும் முதல்வர் கூறினார். சனிக்கிழமை வானிலை சீரடைந்ததால் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.விபத்தில் சிக்கிய 55 தொழிலாளர்களில், 14 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். தலா 11 பேர் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்தவர்கள். 7 பேர் இமாச்சலப் பிரதேசம், 10 பேர் நேபாளம் மற்றும் தலா ஒருவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.- Aiswarya Raj

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன